புதுடெல்லி:
ராஜஸ்தான் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்-வராக சச்சின் பைலட் பதவி ஏற்றனர்.
இதையடுத்து ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடந்தன. 200 சட்டசபை தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 15 சதவீதம் கணக்குபடி 30 எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக நியமனம் செய்ய முடியும்.
அந்த அடிப்படையில் புதிய அமைச்சர்கள் நியமனத்திற்கான பட்டியலை முதல்-வர் அசோக் கெலாட் தயாரித்தார். அந்த பட்டியலில் 40 பேர் பெயர் இடம் பெற்று இருந்தது.
அந்த பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் டெல்லி சென்றனர். அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது முதல் கட்டமாக மந்திரிசபையில் 23 பேருக்கு இடம் அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதில் 22 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள். ஒருவர் ராஷ்டீரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர்களது பெயர் பட்டியலுடன் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் நேற்று இரவு டெல்லியில் இருந்து ராஜஸ்தான் திரும்பினார்கள்.
இன்று மதியம் 12 மணியளவில் தலைநகர் ஜெய்ப்பூரில் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. 23 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் கல்யாண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
23 அமைச்சர்களில் 13 பேர் காபினெட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 10 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவார்கள். புதிதாக பதவி ஏற்ற 23 அமைச்சர்களும் இன்றே தங்களது அலுவலகம் சென்று பணிகளை தொடங்கினார்கள். ராஜஸ்தானில் 2-ம் கட்டமாக மேலும் ஒரு சில அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.